மெட்ரோ ரயில் திட்ட பணியிடத்தை ஒட்டிய சாலையில் பயணிக்கும் பொதுமக்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும்: தலைமை செயலாளர் அறிவுறுத்தல்

சோழிங்கநல்லூர்: மெட்ரோ ரயில் திட்ட பணியிடத்தை ஒட்டிய சாலையில் பயணிக்கும் பொதுமக்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும், என மெட்ரோ நிர்வாகத்திற்கு தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளர். சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு, 3 வழித்தடங்களில் நடைபெறுகிறது. இதில், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தொலைவுக்கும், மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீட்டருக்கும், மாதவரம் முதல் – சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்துக்கும் புதிய வழித்தடங்கள் அமைய உள்ளன. இதற்கான பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

முதற்கட்டமாக, மாதவரம் பால் பண்ணையில் இருந்து மாதவரம் நெடுஞ்சாலை வரை முதலாவது சுரங்கம் தோண்டும் இயந்திரம் நீலகிரியின் மொத்த நீளமான 1400 மீட்டரில் 700 மீட்டர் நீளத்தை கடந்துள்ளது. மாதவரம் பால் பண்ணையில் இருந்து மாதவரம் நெடுஞ்சாலை வரையிலான இரண்டாவது சுரங்கம் தோண்டும் இயந்திரம் பொதிகையின் மொத்த நீளமான 1400 மீட்டரில் 250 மீட்டர் நீளத்தை கடந்துள்ளது. மாதவரம் பால் பண்ணையில் இருந்து வேணுகோபால் நகர் மெட்ரோ வரையிலான மூன்றாவது சுரங்கம் தோண்டும் இயந்திரம் ஆனைமலையின் மொத்த நீளமான 400 மீட்டரில் 100 மீட்டர் நீளத்தை கடந்துள்ளது. மாதவரம் பால் பண்ணையில் இருந்து வேணுகோபால் நகர் மெட்ரோ வரையிலான 4வது சுரங்கம் தோண்டும் இயந்திரம் தயாராக உள்ளது.

வேணுகோபால் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள், வழித்தடம் 3ல் மாதவரம் பால் பண்ணையில் நடைபெற்று வரும் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளை தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் சித்திக், திட்ட இயக்குநர் அர்ச்சுனன், உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர். அப்போது, கட்டுமானக் குழுவினருக்கு, குறிப்பாக பணியிடத்தை ஒட்டிய சாலையில் பயணிக்கும் பொதுமக்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும். வழித்தடம் 5ல் கீழ் உயர்த்தப்பட்ட தொகுப்பை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கவேண்டும்.

சுரங்கம் தோண்டும் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் பாதுகாப்பான முறையில் பணிகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தினார். மேலும், சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் முன் பகுதிக்கு சென்று சுரங்கம் தோண்டும் இயந்திரம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்டறிந்தார். சுரங்கம் தோண்டும் இயந்திரத்திற்குள் பணியாளர்களின் நலனுக்காக எடுக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி மற்றும் வாயுக்களின் அளவு பற்றியும் கேட்டறிந்தார். அடுத்த வருடத்திற்குள் மாதவரம் கெல்லீஸ் வரையிலான சுரங்கப் பணிகள் முடிவடையும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே பசுமை வழி சாலை அருகே சுரங்கம் துளையிடும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் 2026ல் சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்டம் முழுமையாக மக்கள் பன்பாட்டிற்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related posts

வல்லூர் அனல் மின் நிலைய பராமரிப்பு பணி ஜூன் மாதத்திற்குள் முடிக்க திட்டம்: மின் வாரிய அதிகாரிகள் தகவல்

ரேவண்ணா மீதான வழக்கில் புதிய திருப்பம்

வள்ளியூர்: தொழிலாளி தலையில் கல்லைப் போட்டு கொலை