இந்த வழக்கை விரிவாக விசாரணை நடத்திய விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுதலை செய்து கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பு வழங்கியது. சிறப்பு நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக 2017ல் லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி இருவரும் குற்றவாளி என உத்தரவிட்டு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் தரப்பில் கடந்த 3ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் மேற்கண்ட இரு மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ் சந்திர சர்மா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில் பொன்முடி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்கிறது. மேலும் வழக்கில் வழங்கப்பட்ட சிறை தண்டனை என்பது மூன்று வருடம் தான் என்பதால் பொன்முடி சிறையில் சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் இந்த உத்தரவு என்பது இதே வழக்கில் தொடர்புடைய அவரது மனைவி விசாலாட்சிக்கும் பொருந்தும் என நீதிபதி உத்தரவிட்டார்.