திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இவ்வாறு ஏழுமலையானை தரிசனம் செய்யும் பக்தர்கள் அங்குள்ள உண்டியலில் நகை, பணம், உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த காணிக்கை தினமும் கணக்கிடப்பட்டு ஏழுமலையான் கோயில் வங்கி கணக்கில் சேர்க்கப்படுகிறது.
அதன்படி கடந்த மே மாதம் முழுவதும் ஏழுமலையானை 23.38 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். 11 லட்சம் பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் கோயில் உண்டியலில் ரூ.109.99 கோடி காணிக்கையாக செலுத்தியுள்ளனர். 1.6 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.