சேலம், ஏப்.13: நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் கவுண்டம்பாளையம் அருந்தியர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரகுபதி (30). இவரது மனைவி கஸ்தூரி (28). குடிப்பழக்கம் கொண்ட ரகுபதி அடிக்கடி மது குடித்துவிட்டு தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் கோபித்துக்கொண்டு சேலம் பள்ளப்பட்டி கோரிக்காட்டில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு கஸ்தூரி வந்து விட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த போது அங்கு வந்த ரகுபதி தனது மனையிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து வாக்குவாதம் முற்றியதில் அங்கிருந்த செங்கற்களை கொண்டு கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த கஸ்தூரியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பள்ளப்பட்டி போலீசார் ரகுபதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.