பட்டுக்கோட்டை, ஜூன் 7: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த புதுப்பட்டினம் டெல்டா பீச்சில் விடுமுறை நாட்களில் தினசரி மாலை முதல் இரவு வரை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக குவிந்து கடலில் குளித்தும், குதிரை சவாரி செய்தும், செல்ஃபி எடுத்தும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தின் சுற்றுலாத்தலமான மனோராவிற்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அதேபோல் மனோரா அருகிலேயே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள புதுப்பட்டினம் டெல்டா பீச்சிற்கும் பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக வந்து கடலில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
விடுமுறை நாட்களான தற்போது தினமும் மாலை முதல் இரவு வரை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் டெல்டா பீச்சில் குடும்பம், குடும்பமாக குவிந்தனர். முதலில் கடலில் குளித்தும், குதிரை சவாரி செய்தும், செல்பி எடுத்தும் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் தங்களது குழந்தைகளை விளையாட வைத்து பீச்சில் குடும்பம், குடும்பமாக அமர்ந்து காற்று வாங்கிக் கொண்டே நொறுக்குத் தீனிகளை உண்டு மகிழ்ந்தனர். இந்த பீச்சிற்கு வரக்கூடிய பொதுமக்கள் வேன்களிலும், ஆட்டோக்களிலும், இரு சக்கர வாகனங்களிலும் அதிகளவில் வந்து செல்கின்றனர். இதனால் பீச்சை சுற்றியுள்ள பகுதிகளில், வாகனங்கள் அதிகளவில் படையெடுத்து நிற்பதால் தினசரி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இந்த பீச் சமீப காலமாக இப்பகுதி மக்களால் அன்பாக டெல்டா பீச் என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.