புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.8 லட்சத்தில் பயனாளிகளுக்கு உதவி தொகை

புதுக்கோட்டை, ஜூன்6: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தாட்கோ மற்றும் கூட்டுறவுத்துறையின் சார்பில், ரூ.8.03 லட்சம் மதிப்பிலான உதவித்தொகைகளை பயனாளிகளுக்கு, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வழங்கினார். தாட்கோ மூலம் தொழில்முனைவோராக்கும் திட்டம், இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டம், நில மேம்பாட்டுத் திட்டம், நிலம் வாங்கும் திட்டம், சுய உதவிக்குழுக்களுக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டம், விரைவு மின்இணைப்புத் திட்டம், பால்பண்ணை அமைக்கும் திட்டம், சிமெண்ட் விற்பனை முனையம், ஆவின் பாலகம், தூய்மைப் பணியாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கான நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில் இன்றையதினம், தூய்மைப் பணியாளர் நலவாரிய உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ், 2 பயனாளிகளின் குழந்தைகளுக்கு தலா ரூ.1,500 வீதம் ரூ.3,000 மும், தாட்கோ மற்றும் கூட்டுறவுத்துறையின் சார்பில், புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இலுப்பூர் கிளையின் மூலம் செம்பருத்தி மகளிர் சுயஉதவிக்குழுவினர்களுக்கு தாட்கோ மானியமாக ரூ.2,25,000 உட்பட ரூ.8,00,000 மதிப்பிலான வங்கிக் கடன்களுக்கான காசோலைகளையும் கலெக்டர் மெர்சி ரம்யா, நேற்று வழங்கினார். மேலும் கல்வி உதவித்தொகை பெற்றுள்ள மாணவிகள் அனைவரும் உயர்கல்வி பயில்வதை உறுதி செய்யவும், வங்கி கடன் உதவித் தொகை பெற்றுள்ள மகளிர் சுயஉதவிக்குழுவினர்கள் அனைவரும் தங்களது தொழிலில் சிறப்பாக செயல்பட்டு, தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்.மெர்சி ரம்யா தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத், மத்திய கூட்டுறவு மேலாண்மை இயக்குநர் தனலெட்சுமி, மாவட்ட மேலாளர் (தாட்கோ) முத்துரெத்தினம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

ரத்த அழுத்த பரிசோதனை முகாம்

டயர் வெடித்ததால் சென்டர் மீடியனில் மோதிய தனியார் பஸ்

கல்லூரி வேன் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது