ராமநாதபுரம், ஏப்.29: ராமநாதபுரம் அருகே அரசு பஸ்சில் பெண் தவற விட்ட 50 சவரன் நகையை அரசு பஸ் டிரைவர் மற்றும் நடத்துனர் பத்திரமாக ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே பெருங்குளத்தை சேர்ந்தவர் இம்ரான் மனைவி ஜின்னத் ராதிகா(35). இவர் நேற்று காலை ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை சென்ற அரசு பஸ்ஸில் பாம்பனில் ஏறியுள்ளார்.
உச்சிப்புளி பஸ் ஸ்டாண்டில் இறங்கிய அவர், அங்கிருந்து ஆட்டோ பிடித்து தனது கிராமமான பெருங்குளம் சென்று உள்ளார். அப்போது தான் பையில் கொண்டு வந்த 50 சவரன் நகையை காணாமல் போன குறித்து அதிர்ச்சி அடைந்தார். பஸ்ஸில் தவற விட்டதை உணர்ந்த அவர், இது குறித்து ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்ட் நேர காப்பாளரான வடிவேல் என்பவருக்கு தொலைபேசியில் தகவல் கொடுத்தார்.
அவர், மதுரை நோக்கி சென்ற பஸ்ஸின் டிரைவர் மற்றும் நடத்துனிடம் விவரம் கூறியுள்ளார்.
அந்த பெண் பயணித்த இருக்கையை கண்டக்டர் பார்த்த போது பையில் நகை இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த நகைகளை ராமநாதபுரம் திரும்பியதும் ஜின்னத் ராதிகா கணவர் இம்ரானிடம், மதுரையை சேர்ந்த டிரைவர் ஆசைத்தம்பி, கண்டக்டர் கல்லுப்பட்டி செல்வ விநாயகம், நேர காப்பாளர் வடிவேல் ஆகியோர் ஒப்படைத்தனர். நகை பத்திரமாக திரும்பி வந்ததால் ஜின்னத் ராதிகா குடும்பத்தினர் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். மேலும் நகையை பத்திரமா ஒப்படைத்த டிரைவர், கண்டக்டருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர்.