பொள்ளாச்சி, மே 6: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் புலிகள் காப்பத்தில் உள்ள டாப்சிலிப், கவியருவி, வால்பாறை அருகே சின்னக்கல்லார் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். சீசனை பொறுத்து ஒவ்வொரு முறையும் சுற்றுலா பயனிகள் வருகை அதிகளவில் இருக்கும்.இதில் பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப்புக்கு வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர்.
இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், வனப்பகுதியில் உள்ள மரங்கள், செடிக்கொடிகள் வாடி வதங்கியுள்ளது. இதனால் தீ விபத்தை தடுக்க, வனத்தில் தீ தடுப்பு கோடுகளை வனத்துறையினர் ஏற்படுத்தினர். கோடை வறட்சி காரணமாக, வனத்தில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் இல்லாததால் விலங்குகள் இடம் பெயர துவங்கின.
சமவெளி பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் டாப்சிலிப்பில் வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், இங்கு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. டாப்சிலிப் வரும் பயணிகள் பலரும், அங்குள்ள தங்கும் விடுதியில் தங்கி இயற்கை அழகை ரசித்து செல்கின்றனர். பள்ளி கோடை விடுமுறை இன்னும் ஒரு மாதம் இருப்பதால், வரும் நாட்களில் டாப்சிலிப்புக்கு சுற்றுலா பயணிகள் வருகை இன்னும் அதிகமாக இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.