காஞ்சிபுரம் மக்கள் குறைதீர் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் வழங்கினார்

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அலுவலக உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.

இதில், கலைச்செல்வி மோகன் கலெக்டர் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து 255 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கூட்டுறவு நகர வங்கி சார்பில், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50 ஆயிரம் கடனுதவி, 3 பயனாளிகளுக்கு ரூ.65 ஆயிரம் மகளிர் சிறுவணிகக் கடனுதவி, 2 பயனாளிகளுக்கு ரூ.35 ஆயிரம் ஆடவர் சிறுவணி கடனுதவி ஆகியவற்றை கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.

அப்போது, திருப்புக்குழியை சேர்ந்த உஸ்மான் ஷெரீப்க்கு காதொலி கருவி கேட்டு மனு அளித்ததை தொடர்ந்து, அதன் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, அவருக்கு காதொலி கருவியை கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், உதவி கலெக்டர் (பயிற்சி) அர்பிட் ஜெயின், காஞ்சிபுரம் மண்டல இணை பதிவாளர் ஜெய, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாபு, தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சுமதி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

தோல்வி பயத்தால் கிணற்றில் குதித்த மாணவன் மீட்பு

493 மதிப்பெண் பெற்று அன்பில் அரசு மாணவி அசத்தல்

விளையாட்டு விடுதிக்கு மாணவர்கள் தேர்வு