ஏழாயிரம்பண்ணை அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து: தொழிலாளர்கள் உயிர் தப்பினர்

ஏழாயிரம்பண்ணை, மார்ச் 29: ஏழாயிரம்பண்ணை அருகே தனியார் பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. ஏழாயிரம்பண்ணை அருகே சிவசங்குபட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் 20க்கும் மேற்பட்ட அறைகளில் 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை பட்டாசு ஆலையில் உள்ள மருந்து கலவை செய்யும் அறையில் உராய்வு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதைப் பார்த்து சுதாரித்துக் கொண்ட தொழிலாளர்கள் உடனடியாக வெளியே தப்பி ஓடினர். மேலும் இது குறித்து ஏழாயிரம்பண்ணை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து மற்ற அறைகளுக்கு தீ பரவாமல் அணைத்தனர். இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

பெரியகருப்பூர் சாமுண்டீஸ்வரி கோயில் காப்பு கட்டு விழா

முதல்வரின் 3 ஆண்டுகால ஆட்சியில் முத்தான திட்டங்கள்; காலை உணவு திட்டம் பேருதவியாக உள்ளது: குழந்தைகளின் பெற்றோர் பெருமிதம்

அதிக லாபம் ஆசை காட்டி பெண்ணிடம் ₹6.56 லட்சம் மோசடி