உழவர் சந்தையில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை

 

நாமக்கல், மே 24: நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், வள்ளிபுரம் ஊராட்சி தோக்கம்பாளையத்தில், செல்வராஜ் என்ற மாற்றுத்திறனாளி நடக்க முடியாத நிலையில், தனது 80வயது தந்தையுடன் குடிசையில் வசித்து வந்தார். இது குறித்து தகவல் அறிந்த கலெக்டர் உமா, கையால் இயக்க கூடிய மூன்று சக்கர சைக்கிள், வீட்டுமனை பட்டா நகல், மாத உதவித்தொகை ரூ.3,000 பெறுவதற்கான உத்தரவு ஆகியவற்றை, உடனடியாக அவருக்கு வழங்கினார்.

மேலும், அவர்களது சொந்த இடத்தில் வீடு கட்டுவதற்கான உத்தரவு வழங்கப்பட்டு, சமூக பொறுப்பு நிதியிலிருந்து ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில், புதிய வீடு கட்டும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. இப்பணியை நேற்று, கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு, விரைவாக பணிகளை முடித்து, பயன்பாட்டுக்கு வழங்கும்படி அதிகாரிகளை வலியுறுத்தினார்.

முன்னதாக, நாமக்கல் உழவர் சந்தையில் மழைநீர் தேங்காத வகையில், மழைநீர் வடிகால் கட்டமைப்புகளை சீர் செய்யும் பணிகளை, கலெக்டர் பார்வையிட்டார். உழவர் சந்தையில், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என நகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும், நாமக்கல் முல்லை நகரில் பூங்கா அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தையும், நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை பார்வையிட்டு, தினசரி வருகை தரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை, நூல்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்களை கேட்டறிந்தார். நூலகத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்