உடுமலை, ஏப். 29: தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வறுத்தெடுத்து வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் அக்னி நட்சத்திரம் துவங்க உள்ளது. அதற்கு முன்பே கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது.குறிப்பாக, உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை உள்ளது. நண்பகல் நேரத்தில் சாலைகளில் வாகன மற்றும் மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ளது.
இரவு நேரத்திலும் புழுக்கம் காரணமாக மக்கள் அவதிப்படுகின்றனர். பகல் நேரத்தில் இளைஞர்கள் உள்ளிட்டோர் ஆறு, குளம், திருமூர்த்திமலை நீச்சல்குளம், பஞ்சலிங்க அருவி என நீர்நிலைகளை தேடிச் சென்று குளித்து வருகின்றனர். மேலும், தாகம் தணிக்க இளநீர் விற்பனை சூடுபிடித்துள்ளது. உடுமலையில் ஒரு இளநீர் அளவை பொருத்து ரூ.35 முதல் ரூ.50 வரை விற்கப்படுகிறது. கடைகளில் ஜூஸ் மற்றும் குளிர்பானங்கள் விற்பனையும் மும்முரமாக நடக்கிறது.