தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சொந்த தொகுதியான சென்னை கொளத்தூர் தொகுதியில் இன்று அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனை தொடர்ந்து இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசுக்கு மக்களின் ஒத்துழைப்பு வேண்டும். கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம், மகளிருக்கான உரிமையை தருகிறோம். இந்த திட்டத்தின் மூலம் சுமார் ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்கள் பயன்பெற போகின்றனர்.
இன்னும் பல திட்டங்களை கொண்டு வருவதற்கான உற்சாகங்களை மக்கள் வழங்கி வருகின்றனர் என கூறினார். இதேபோல் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதி குறித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எனது சொந்த தொகுதிக்கு ஒரே வாரத்தில் 2வது முறையாக வரும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த கொளத்தூர் தொகுதி தான் என்னை தொடர்ச்சியாக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுத்தது. அப்படி என்னை இத்தனை முறை வெற்றி பெற செய்த கொளத்தூர் தொகுதிக்கு எத்தனை முறை வந்தாலும் திகட்டாது. இவ்வாறு கூறினார்.