வேலூர் : கோடை வெப்பத்தால் வேலூர் கோட்டை அகழியில் ஆயிரக்கணக்கான மீன்கள் நேற்று செத்து மிதந்தன. துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினர்.
வேலூரில் வரலாற்று புகழ்மிக்க கோட்டை அமைந்துள்ளது. 133 ஏக்கர் பரப்பளவிலான கோட்டைக்கு ஒரே ஒரு நுழைவுவாயில் உள்ளது. கோட்டையை சுற்றிலும் 191 அடி அகலமும், 29 அடி ஆழமும் கொண்ட அகழி அமைந்துள்ளது. ஏராளமான கோட்டைகளின் அகழிகள் தூர்ந்து போய்விட்ட நிலையில், வேலூர் கோட்டை இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. ஆனால் இந்த அகழி குப்பை, கழிவுகள் கொட்டும் இடமாக தற்போது மாறியிருப்பது வேதனையான சம்பவமாகும்.
இந்நிலையில் வேலூரில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது. பகல் நேரங்களில் அனல் காற்று வீசி வருகிறது. வேலூர் கோட்டையில் உள்ள அகழியில் நேற்று அதிகாலை ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. இதைப்பார்த்து அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்று நோய் பாதிப்பு ஏற்படும் அபாயமும் உள்ளதாக மக்கள் கூறினர்.
அதேபோல் இங்குள்ள செத்து மிதக்கும் மீன்களை நாரை, ெகாக்கு ஆகிய பறவைகள் சாப்பிடுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசியதால், வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கோட்டை அகழியில் செத்து மிதக்கும் மீன்களை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் அகழியில் வளர்க்கப்பட்டு வந்த மீன்கள் செத்து மிதந்துள்ளது. மேலும் அகழியில் குப்பைகள் கொட்டுவதால் மீன்கள் அதை சாப்பிட்டதால் இறக்கிறதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். காலை நேரத்தில் தினந்தோறும் கோடை சுற்றி நடைபயிற்சி செல்கிறார்கள். அதுமிட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் வருகிறார்கள்.
அகழியை சுற்றி கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி ேகாட்டை அகழியில் குப்பை கொட்டும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்து கிடக்கும் மீன்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.