திருச்சி: ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலில் வசந்த உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி வீதியுலா வந்தார். பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படுவதும், 108 வைணவ தலங்களில் முதன்மையானதுமான திருச்சி ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டு முழுவதும் விழாக்கள் நடந்து வருகிறது. இதில் வைகாசி மாதம் நடைபெறும் வசந்த உற்சவம் சிறப்பு வாய்ந்தது. இந்த விழா கடந்த 27ம் தேதி துவங்கி நேற்று 4ம் தேதி வரை 9 நாட்கள் நடந்தது. தினம்தோறும் மாலை 5 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு வசந்த மண்டபம் வந்தடைவார். அங்கு இரவு 9.15 மணி வரை பக்தர்களுக்கு சேவை சாதித்து மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.
கடந்த 2ம் தேதி நெல்லளவு கண்டருளினார். விழாவின் நிறைவு நாளான நேற்று (4ம் தேதி) மாலை 5 மணிக்கு நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதன்பின் 7 மணிக்கு சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி நடந்தது. பின்னர் வசந்த மண்டபத்தில் இரவு 8.30 முதல் 10.30 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினார். இரவு 11.15 மணிக்கு வசந்த மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 12 மணிக்கு மூலஸ்தானம் அடைந்தார். இத்துடன் விழா நிறைவடைந்தது.