பாஜ சார்பில் பேச்சுவார்த்தை நடத்தும் டெல்லியைச் சேர்ந்தவர்களிடம் ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர் ஆகியோர் தலா ஒரு தொகுதி போதும் என்று சம்மதித்துள்ளனர். ஜாண்பாண்டியனும் ஒரு தொகுதி போதும் என்று கூறுகிறார். ஆனால் பாமக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் மாநிலங்களவை எம்பி சீட், ஒன்றிய அமைச்சர் பதவி வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் பாஜவும் தவித்து வருகிறது. தமிழகத்தில் ஒரு சீட் கூட யாருடனும் நின்றாலும் ஜெயிக்க முடியாது. இதனால் பாமக, தேமுதிக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுக்கு வேறு மாநிலத்தில் மாநிலங்களவை சீட் மற்றும் ஒன்றிய அமைச்சர் பதவிக்கு சம்மதித்தால், நமக்கு இழப்புதான். அவர்கள் பேசாமல் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் வைக்கட்டும். இல்லாவிட்டால் நம்முடன் பின்னர் கூட்டணி வைக்கலாம் என்று பாஜ தலைவர்கள் கூறி வருகின்றனர். வாசனோ, இரு அணியிடமும் பேசி வருகிறார். மக்களவை தேர்தலில் பாஜகவுடனும், சட்டப்பேரவை தேர்தலுக்கு அதிமுகவுடனும் கூட்டணிக்குத் தயார் என்கிறார். இதற்கு பாஜக சம்மதித்தாலும், அதிமுக தலைமையோ இப்போது வந்தால் கூட்டணி. இல்லாவிட்டால் எப்போதும் கூட்டணி இல்லை என்று கண்டிப்புடன் கூறிவிட்டனர். கூட்டணிக் கட்சிகளின் நிபந்தனையால் அதிமுக, பாஜவால் கூட்டணி பேச்சுவார்த்தையை வெளிப்படையாக தொடங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.