ஒய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை உள்ளிட்ட காசோலைகளை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து, ஓய்வு பெற்ற / விருப்ப ஓய்வு பெற்ற / இறந்த பணியாளர்களின் வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை உள்ளிட்ட பணப்பலன்களுக்குரிய காசோலைகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் முன்னிலையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்கள். தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கடந்த மே-2020 முதல் நவம்பர்-2022 வரை பணிபுரிந்து ஓய்வு பெற்ற / விருப்ப ஓய்வு பெற்ற / இறந்த பணியாளர்கள் என மொத்தம் 6,281 நபர்களுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்கள் ரூ.1,582.44 கோடி வழங்கிட உத்தரவிட்டார்கள்.

அதனை தொடர்ந்து, முதற்கட்டமாக கடந்த 01.12.2022 அன்று போக்குவரத்துத்துறை அமைச்சர் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கடந்த மே-2020 முதல் மார்ச்-2021 வரை பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற / இறந்த பணியாளர்கள் என மொத்தம் 1,241 நபர்களுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்கள் ரூ.242.67 கோடியும், இரண்டாம் கட்டமாக கடந்த 27.03.2023 அன்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கடந்த ஏப்ரல்-2021 முதல் மார்ச்-2022 வரை பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற / இறந்த பணியாளர்கள் என மொத்தம் 1,626 நபர்களுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்கள் ரூ.308.45 கோடி வழங்கினார்கள்.

இதனைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கடந்த ஏப்ரல்-2022 முதல் நவம்பர்-2022 வரை பணிபுரிந்து ஓய்வு பெற்ற / விருப்ப ஓய்வு பெற்ற / இறந்த பணியாளர்கள் என மொத்தம் 3,414 நபர்களுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்கள் ரூ.1,031.32 கோடி வழங்கப்படவுள்ளது. மூன்றாவது கட்டமாக சென்னையில் இன்று (27.05.2023) அருள்மிகு கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் முன்னிலையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாநகர் போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த 441 நபர்களுக்கு ரூபாய் 115.47 கோடி மற்றும் அரசுப் விரைவுப் போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த 171 நபர்களுக்கு ரூபாய் 55.76 கோடி, ஆக மொத்தம் 612 நபர்களுக்கு ரூபாய் 171.23 கோடிக்கான காசோலைகளை வழங்கினார்கள்.

Related posts

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு

நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இரங்கல்

பிளஸ் 2 தேர்வில் ஒன்றாக தேர்ச்சி தாய், மகள் கல்லூரியில் சேர முடிவு