மேலும் காவலர்கள் வாரண்ட் இருந்தால் மட்டுமே கட்டணமின்றி பயணிக்க அனுமதி, இல்லையேல் கட்டாயம் டிக்கெட் பெற வேண்டும் என உத்தரவிட்டது. குறிப்பாக இந்த அறிவிப்பை போக்குவரத்து துறை வெளியிட்ட நிலையில் காவலர் ஆறுமுக பாண்டி மீது நடவடிக்கை எடுக்க கூடாது என அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். இருந்த போதிலும் அவர் மீது விசாரணை நடைபெற்றது. அதே சமயம் விசாரணை நடைபெறும் போது ஆறுமுக பாண்டி மயக்கம் அடைந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் தமிழக போலீசார் அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கும் வகையில் செயல்பட தொடங்கினர்.
குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட பேருந்துகளை கண்டறிந்து நோ பார்க்கிங், சீட் பெல்ட் அணியாமல் செல்வது , அதிக பயணிகளை ஏற்றவது உள்ளிட்ட சட்ட விதிமீறல்களை காரணம் காண்பித்து அபராதம் விதிப்பதால் போக்குவரத்து ஊழியர்கள் செய்வது அறியாமல் திகைத்துபோய் உள்ளனர். குறிப்பாக இதற்கு முன்பு வாகனம் விபத்து நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் போக்குவரத்து போலீசார் மற்றும் அரசு பேருந்துகளுக்கு இடையே இதுபோன்ற அபராதம் என்பது பெரும்பாலும் இருக்காது. ஆனால் தற்போது போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் போலீசார் இடையே சட்டரீதியான மோதல் என்பது சற்று குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் போக்குவரத்து கழக தொழிலாளர்கள், போக்குவரத்து காவல் துறையினர் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், இருதரப்பு அலுவலர்கள், தொழிலாளர் பிரதிநிதிகளை உடனடியாக கூட்டி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.தமிழகம் முழுவதும் காவல் துறையினர் திட்டமிட்டு அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மீது அபராதம் விதித்து வருகின்றனர். காவல் துறை முழுவதுமாக ஒன்றிணைந்து அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் விதி மீறல்களை தடுப்பதாக தொடங்கி இருப்பது நல்ல அறிகுறி அல்ல” என குறிப்பிடப்பட்டுள்ளது.