பயிற்சி முடித்துள்ள காவலர்கள் மக்களுக்காக பணியாற்ற வேண்டும்: வடக்கு மண்டல காவல்துறை அதிகாரி கண்ணன் பேச்சு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட காவல்துறை பயிற்சி பள்ளியில், தமிழ்நாடு காவல்துறை பணிக்கு தேர்வான 429 காவலர்களுக்கு கடந்த 8 மாதங்களாக திருவள்ளூர் அடுத்த கனகவல்லிபுரம் கிராமத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் விழுப்புரம் 97, திருவண்ணாமலை 80, சேலம் 65, கடலூர் 62, ராணிப்பேட்டை 38, திருப்பத்தூர் 25, வேலூர் 19, காஞ்சிபுரம் 17, சென்னை சிட்டி 9, ஆவடி சிட்டி 6, சேலம் சிட்டி 5, செங்கல்பட்டு 4, தாம்பரம் சிட்டி 2 ஆகிய பகுதிகளை சேர்ந்த 429 பேருக்கு காவலர் பயிற்சி மட்டுமின்றி நீச்சல், ஓட்டுனர், முதலுதவி, தீயணைப்பு, கமாண்டோ உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்று முதல் 3 இடங்களை பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.

2ம் நிலை காவலர் பயிற்சி வகுப்பு நிறைவு விழாவில், வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன், திருவள்ளூர் மாவட்ட எஸ்பி. பா.சிபாஸ் கல்யாண், கனகவல்லிபுரம் காவலர் பயிற்சி பள்ளி முதல்வர் கூடுதல் எஸ்பி வீரபெருமாள், திருவள்ளூர் ஏஎஸ்பி விவேகானந்தா சுக்லா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விழாவில், வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் பேசியதாவது;
தமிழ்நாடு காவல்துறையில் இளம் காவலர்கள் இணைந்துள்ளனர். இந்த 429 பயிற்சி பெற்ற காவலர்கள் மட்டுமல்லாது அவர்களை ஊக்கப்படுத்திய பெற்றோர்கள், உறவினர்களை வாழ்த்துகிறேன். இந்த பயிற்சி பள்ளியில் 429 பேரில் 204 பேர் பட்டப்படிப்பு, 27 பேர் மேல்பட்டபடிப்பு, 83 பேர் பொறியியல், 57 பேர் பட்டயபடிப்பு, 5 பேர் ஐ.டி.ஐ. படிப்பு, 3 பேர் உடற்பயிற்சியில் பட்டய படிப்பு, 45 பேர் மேல்நிலை வகுப்பு, 9 பேர் எஸ்.எஸ்.எல்.சி.,படித்துள்ளனர். இது மிகப்பெரும் மாற்றம்.

ஒரு காலத்தில் 8ம் வகுப்பு படித்து காவலர்களாக சேர்ந்தனர். தற்போது காவலர் பணியில் இருக்கக்கூடிய நன்மதிப்பெண் காரணமாக தற்போது பட்டப்படிப்பு படித்தவர்கள் அதிகம் சேர்ந்துள்ளனர். இது மிகவும் பாராட்டத்தக்கது. இது பொதுமக்களிடையே காவலர்களின் மதிப்பை அதிகப்படுத்தும். பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்ற நியாயமான சட்டத்திற்கு உட்பட்டு எல்லா வகையிலும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் பணியாற்ற வேண்டும். இவ்வாறு பேசினார்.

இதையடுத்து பயிற்சி காவலர்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. பயிற்சி கல்லூரியில் துணை முதல்வர் கணேஷ் குமார், கவாத்து பயிற்சியாளர் பாஸ்கர், முதன்மை சட்ட பயிற்சியாளர் கலிய சுந்தரம் மற்றும் காவலர்களின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

Related posts

ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மகனை பராமரித்து வரும் ரயில்வே அதிகாரியை இடமாற்றம் செய்த உத்தரவு ரத்து

அகமதாபாத் விமான நிலையத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் கைது..!!

பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக கனமழை