சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களைகட்டிய கொடிவேரி அணை-15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்தனர்

கோபி : கொடிவேரி அணைக்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனர். ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கிவரும் கொடிவேரி அணையானது சுமார் 700 ஆண்டுக்கு முன்னர் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு அணையாகும். 15 அடி உயரத்திலிருந்து அருவி போல் தண்ணீர் கொட்டுவதாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக குளிக்க முடியும் என்பதாலும் இந்த அணையில் கடற்கரை போன்ற மணல் பரப்பும், பெண்கள் குழந்தைகள் விளையாடுவதற்கான பூங்கா உள்ளிட்ட பல்வேறு வசதிகளும், பொழுதுபோக்கு வசதிகளும் இருப்பதால் இங்கு அரசு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

மிகக் குறைந்த செலவில் விடுமுறையை கழிக்க முடியும் என்பதால் கொடிவேரி அணைக்கு ஒவ்வொரு விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களிலும், அரசு விடுமுறை நாட்களிலும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கொடிவேரி அணைக்கு ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர் போன்ற வெளி மாவட்டங்களில் இருந்தும், பெங்களூர் உள்ளிட்ட பகுதியில் இருந்தும் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

அருவிபோல் கொட்டும் அணை தண்ணீரில் குளித்தும், அந்த பகுதியில் விற்பனை செய்யப்படும் சுவையான மீன்களை சாப்பிட்டும், பெண்கள் குழந்தைகள் பூங்காவில் விளையாடியும், கடற்கரை போன்ற மணல் பரப்பில் அமர்ந்தும் தங்கள் பொழுதை கழித்து சென்றனர். கடுமையான கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிப்பதற்காக பல மணி நேரம் அருவி போல் கொட்டும் தண்ணீரில் நின்று சுற்றுலா பயணிகள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கொடிவேரி அணைக்கு நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததை தொடர்ந்து அணையில் பங்களாபுதூர் மற்றும் கடத்தூர் காவல் நிலையங்களை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படனர். அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் குடிபோதையில் அணைக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அணைக்கு வருபவர்கள் மது பாட்டில்களை கொண்டு செல்கின்றனரா என போலீசார் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதித்தனர்.

Related posts

ரிசல்ட் வருவதற்கு முன்பே தொண்டர்கள் மீது பழிபோட தயாராகும் இலை தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சொல்லிட்டாங்க…

அமித்ஷாவுக்கு பாஜ நிர்வாகி எழுதிய கடிதத்தை வெளியிட்டு ராகுல் பிரசாரம்