இந்த பிரச்சினையைப் போக்கும் வகையில் அண்ணா சாலையில் மேம்பாலம் அமைப்பது குறித்து தமிழக நெடுஞ்சாலைத் துறை ஆலோசனை நடத்தி வந்தது. இந்நிலையில், கடந்த 2022-23-ம் ஆண்டுக்கான நெடுஞ்சாலைத் துறை மானிய கோரிக்கையில் அமைச்சர் எ.வ.வேலு, “சென்னை அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் எல்டாம்ஸ் சாலை சந்திப்பு, எஸ்ஐஇடி கல்லூரி சாலை சந்திப்பு, செனெடாப் சாலை சந்திப்பு, நந்தனம் சந்திப்பு, சிஐடி சாலை சந்திப்புகளைக் கடந்து சைதாப்பேட்டை பேருந்து நிலையம் வரை உயர்மட்டச் சாலை அமைக்கப்படும். இதனால் தடையற்ற சீரான வாகன போக்குவரத்து உறுதி செய்யப்படும்” என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தேனாம்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை வரையிலான 3.2 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்படவுள்ள 4 வழி உயர்மட்ட சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.621 கோடியில் தேனாம்பேட்டை-சைதாப்பேட்டை இடையே 4 வழித்தட உயர்மட்ட சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த விழாவில் அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.