செங்கோட்டை: தமிழக – கேரள எல்லையான புளியரையை அடுத்துள்ள கேரள மாநிலம் அச்சன்கோவில் இருந்து புனலூருக்கு செல்லும் அலிமுக்கு சாலையில் களரி வளையம் அருகே ஒன்றரை வயது மதிக்கத்தக்க யானை குட்டி நேற்று முன்தினம் அதிகாலை இறந்து கிடந்தது. தகவலறிந்து மண்ணப்பாறை வன காவலர்கள் அங்கு வந்தனர். ஆனால் இறந்த குட்டியை சுற்றி யானை கூட்டம் அருகில் யாரும் செல்லமுடியாதபடி நின்றிருந்தன. சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகு மற்ற யானைகள் காட்டுக்குள் சென்றன. அங்கு நின்ற தாய் யானையை வனத்துறையினர், பட்டாசு வெடித்து தாய் யானையை விரட்டினர். பிரேத பரிசோதனையில் வயிற்றுப்போக்கு மற்றும் மாரடைப்பு காரணமாக மரணம் ஏற்பட்டது தெரிய வந்தது. இதனால் குட்டியின் உடல் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதை பார்த்து தாய் யானை கண்ணீர் விட்டது.