அண்டை மாநிலமான கேரளாவில் நிபா வைரஸ் தாக்கம் உள்ளது. ஆனால், தமிழகத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை. இருப்பினும், முதல்வர் உத்தரவின்பேரில் தமிழ்நாடு- கேரளா எல்லையில் அமைந்துள்ள நீலகிரி, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்ட எல்லைகளில் கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு காய்ச்சல் அறிகுறிகள் ஏதேனும் உள்ளதா? என சுகாதாரத்துறை மூலம் விரிவாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சோதனையில் காய்ச்சல் அறிகுறிகள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் பெரிய அளவில் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த 9 மாதங்களில் 2.5 லட்சத்திற்கு மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. ஜனவரி முதல் தற்போது வரை தமிழ்நாட்டில் 3 பேர் டெங்குவால் இறந்துள்ளனர். 2017ல்
ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது தமிழ்நாடு முதல்வர் எடுத்துள்ள நடவடிக்கையால் டெங்கு பாதிப்புகள் மிகவும் கட்டுக்குள் உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுடன் சேர்ந்து இதனை கட்டுப்படுத்துவது, மருந்து தெளிப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.