மேலும், இதில் 50,000க்கும் மேற்பட்ட போலீசாரின் விவரங்களும் இந்த போர்ட்டலில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த போர்ட்டலை நேற்று முன்தினம் (மே 3ம் தேதி) அடையாளம் தெரியாத சிலர் ஹேக் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அதிலிருந்த சில டேட்டாவையும் ஹேக்கர்கள் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது ‘Falcon Feedsio என்ற பெயரில் இயங்கும் அந்த ஹேக்கர் தான் தமிழ்நாடு காவல் துறையின் ஃபேஸ் ரெகக்னிஷன் போர்ட்டலை ஹேக் செய்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றனர்.
அதாவது, குற்றவாளிகள், காணாமல் போனவர்கள் உள்ளிட்டோரின் தகவல்கள், அந்த போர்ட்டலில் இருந்த தமிழ்நாடு ஃபேஸ் ரெகக்னிஷன் சாப்ட்வேரில் தான் இருந்தது. மேலும், அதில் எஃப்ஐஆர் எண்கள், தேதிகள், புகார் தொடர்பான விவரங்கள் மற்றும் 50,000 காவல்துறை அதிகாரிகளின் முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்களும் அதில் இருந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து தமிழ்நாடு காவல் துறை வெளியிட்ட அறிக்கை: FalconFeedsio என்ற முகவரியில் தமிழ்நாடு காவல்துறையின் முக அடையாள மென்பொருள் செயலி (FRS) சைபர் பாதுகாப்பு மீறல் இருப்பதாக ஒரு செய்தி வெளியிடப்பட்டது. FRS மென்பொருள் CDAC- கொல்கத்தாவால் உருவாக்கப்பட்டது. FRSசெயலி (TNSDC ELCOT)யில் உள்ள சர்வரில் ஹோஸ்ட் செய்யப்பட்டுள்ளது. சிசிடிஎன்எஸ் (CCTNS) தரவுத்தளத்திலிருந்து தேடப்படும் நபர்கள், காணாமல் போனவர்கள் மற்றும் அடையாளம் தெரியாத இறந்த உடல்களின் படங்களைப் பிடிக்க IRS மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது.
தற்போது, மாநிலம் முழுவதும் 46,112 பயனர்களால் FRS பயன்படுத்தப்படுகிறது. சமீபத்திய பாதுகாப்பு தணிக்கை TNeGA ஆல் மார்ச் 13ம் தேதி மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், அட்மின் அக்கவுண்டில் பாஸ்வேர்டு திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. அட்மின் அக்கவுண்டில் பயனர்களுக்கான ஐடியை (ID) உருவாக்குதல், எவ்வளவு தேடுதல் எண்ணிக்கை மேற்கொள்ளப்பட்டது மற்றும் முன் முனையின் விவரங்களை மட்டுமே பார்க்க முடியும் போன்ற வரையறுக்கப்பட்ட உரிமைகள் மட்டுமே உள்ளது.
இது சம்பந்தமாக, ELCOT, TNeGA, CDAC கொல்கத்தா ஆகிய நிறுவனங்களுக்கு உரிய நடவடிக்கைக்காக தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பு நடவடிக்கையாக, நிர்வாக கணக்கு தற்காலிகமாக நீக்கப்பட்டது, அங்கீகரிக்கப்படாத பயனர் முன்நிலை தரவை மட்டுமே பார்க்க முடியும் (பயனர்களுக்கான ஐடி உருவாக்கம், தேடுதல் எண்ணிக்கை). எனவே, அங்கீகரிக்கப்படாத பயனர் பின்தள தரவு மற்றும் முக்கிய அணுகலைப் பெற முடியாது. இதுகுறித்து சென்னை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.