தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தியில், தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏப்ரல் 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

ஏப்ரல் 9 மற்றும் 10ம் தேதி உள் தமிழக மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.

Related posts

மேட்டூர் அருகே பரிசல் துறையில் மின்னல் தாக்கியதில் பெண் உயிரிழப்பு

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் சுவாமி நம்மாழ்வார் மங்களாசாசனம்: திரளானோர் பங்கேற்பு

கும்மிடிப்பூண்டி சிப்காட் குப்பைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து