சென்னை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக பேராசிரியை நிர்மலாதேவிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு ஏப்ரல் 26ம் தேதி கீழமை நீதிமன்றத்தில் வழங்கப்படவுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக கடந்த 2018ம் ஆண்டு அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவிக்கு எதிராக சிபிசிஐடி போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கை பெண் டி.ஐ.ஜி. தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டுமென்று கோரி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கில், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் நிர்மலா தேவிக்கு எதிரான வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இந்த குற்ற வழக்கில் சாட்சி விசாரணை முடிந்து ஏப்ரல் 26ம் தேதி ஸ்ரீவில்லிபுத்துார் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பேராசிரியை மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசாரணை நடத்த விசாகா குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்காமல் விசாகா குழு விசாரணை நடத்த முடியாது. வேறு ஏதேனும் புகார் அளிக்கப்பட்டுள்ளதா என்று மனுதாரர் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர்.