உயிர் பிழைத்து வந்ததை இன்னும் நம்ப முடியவில்லை: காவ்யா தாப்பர்

சென்னை: இந்தி, பஞ்சாபி, தெலுங்கு ஆகிய மொழிகளில் படங்கள் மற்றும் வெப்தொடர்களில் நடித்துள்ள காவ்யா தாப்பர், தமிழில் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில் நடித்திருந்தார். தற்போது விஜய் ஆண்டனி தயாரித்து இயக்கி நடிக்கும் ‘பிச்சைக்காரன் 2’ படத்தில் அவரது ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தின் பாடல் காட்சி மலேசியாவில் படமானபோது திடீர் விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்த விஜய் ஆண்டனி, தீவிரமான சிகிச்சைக்குப் பிறகு உடல்நிலை தேறி வருகிறார். அந்த விபத்தில் தானும் சிக்கி பலத்த காயம் அடைந்ததாக காவ்யா தாப்பர் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: கடந்த ஜனவரி மாதம் விஜய் ஆண்டனியும், நானும் பங்கேற்ற ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் ஒரு பாடல் காட்சி, மலேசியா லங்காவி தீவில் படமானது. நாங்கள் சென்ற படகு மீது இன்னொரு படகு மோதியது. திடீரென்று விபத்து நடந்ததால், படகில் இருந்த நானும், விஜய் ஆண்டனியும் கடலில் விழுந்தோம். விஜய் ஆண்டனி கடலில் மூழ்கினார். அவருக்கு நீச்சல் தெரியாது. உடனே அவரைக் காப்பாற்ற நீந்திச் சென்றேன்.

அதற்குள் படக்குழுவினர் வந்துவிட்ட நிலையில், அவர்கள் உதவி யுடன் விஜய் ஆண்டனியை மீட்டு, சுயநினைவு இல்லாமல் இருந்த அவரை மருத்துவமனையில் சேர்த்தோம். தீவிர சிகிச்சைக்குப் பிறகு கண் திறந்து பார்த்தார். அப்போது என்னையும் பரிசோதித்த ஒரு டாக்டர், என் முகத்தில் பலத்த காயம் இருப்பதாக கூறினார். என் மூக்கில் எலும்புமுறிவும், நெற்றியில் காயமும் இருந்ததை அப்போது உணர்ந்தேன். உடனே எனக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. கடலில் விழுந்த நான், மரணத்தின் எல்லை வரை சென்று வந்தேன். எப்படியோ உயிர் பிழைத்துவிட்டேன். இச்சம்பவத்தை இன்னமும் என்னால் நம்ப முடியவில்லை. விபத்தினால் எனது முகத்தில் ஏற்பட்ட வடுக்கள் அப்படியே இருக்கின்றன. அது வாழ்நாள் முழுவதும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்.

Related posts

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, கோவிலங்குளம் பகுதிகளில் ஒரே நாளில் 8 செ.மீ. மழை பதிவு

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக 3 பேர் மீது வழக்குப்பதிவு

மதுரவாயல் அருகே பக்கத்து வீட்டு நாய் கடித்ததில் பெண் காயம்