சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களிலிருந்து சபரிமலைக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் : போக்குவரத்து துறை அறிவிப்பு

சென்னை: அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோயிலுக்கு, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகிய திருவிழாக்களின் போது, தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இந்தாண்டுக்கு வரும் 16ம்தேதி முதல் 2024ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி வரை சென்னை, திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி / கடலூர் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு, அதிநவீன சொகுசு மிதவை பேருந்துகள் மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள சிறப்பு பேருந்துகளாக இயக்கப்படவுள்ளன.

மேலும், தேவஸ்தானத்தின் அறிவிப்பின்படி, சபரிமலை கோவில் வரும் டிசம்பர் 27ம்தேதி முதல் 30ம் தேதி மாலை 5 மணி வரை கோவில் நடை சாத்தப்படுவதால், இதனை கருத்தில் கொண்டு டிச.26ம் தேதி முதல் 29ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படமாட்டாது. மேலும் சென்னை மற்றும் இதர இடங்களிலிருந்து கூடுதலாக பேருந்துகள் இயக்குவதற்கு அனுமதி பெறப்பட்டு சிறப்பான முறையில் பேருந்துகளை இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் குழுவாக செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையில் பேருந்து வசதி செய்து தரப்படும். தனிடையே, 30 நாட்களுக்கு முன்னதாக இச்சிறப்பு பேருந்துகளுக்கு ஆன்லைன் மூலமாக, www.tnstc.in மற்றும் TNSTC official app ஆகிய இணையத்தளங்களில் முன்பதிவு செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பேருந்துகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு, 9445014452, 9445014424, 9445014463 மற்றும் 9445014416 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

Related posts

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு ஓய்வு பெறும் நாளில் பிடிஓ சஸ்பெண்ட்: 11 ஒன்றிய அலுவலர்கள் மீது வழக்கு

நான் முதல்வன் திட்டம் உதவியால் ஐஎப்எஸ் தேர்வில் தஞ்சை வாலிபர் வெற்றி

ககன்யான் திட்டத்துக்கான 3ம் கட்ட சோதனை வெற்றி