தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ்.இளங்கோவன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அமைச்சர் உதயநிதியின் சனாதனம் ஒழிப்பு பற்றிய பேச்சைக் கண்டு பாஜ பொங்கி குதிக்கிறது. புரண்டு புலம்புகிறது. சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று இளைய சமுதாயத்தின் குரலாக உதயநிதி பேசி இருக்கிறார். சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று புத்தர் பேசினார், ராமானுஜர் பேசினார், வள்ளலார் பேசினார், தமிழ்நாட்டில் தந்தை பெரியார் பேசினார். பெருந்தலைவர் காமராஜர் பேசினார். இது காலம் காலமாக நடக்கும் மனித குலத்திற்கான போராட்டம்.
சனாதனத்தால் நாட்டை துண்டாடும் நோக்கத்தில் செயல்பட்ட ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை, கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்திராகாந்தி தடை செய்தார். சனாதனத்தை ஆதரித்து கவர்னர் ரவி பேசலாம், பாஜ பேசலாம், ஆனால் சனாதனத்தை எதிர்த்து அமைச்சர் உதயநிதி பேசினால் மட்டும் தவறா?. சனாதனம் என்பது சாதி உயர்வு தாழ்வை கற்பிக்கும். குழந்தை திருமணத்தை ஆதரிக்கும். கணவனை இழந்தால் பெண்களை உடன்கட்டை ஏற வேண்டும் எனக் கூறும் என்று பேசினார்.