சேலம், கடலூர் மாவட்டங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சேலம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்தியில், சேலம் மாவட்டம், சேலம் வட்டம், கன்னங்குறிச்சி தாமரைநகர் என்ற இடத்திலுள்ள புது ஏரியில் கடந்த 22ம் தேதி நண்பகல் குளிக்கச் சென்ற கன்னங்குறிச்சி கிராமம், கோவிந்தசாமி காலனியைச் சேர்ந்த செல்வன்.பிரசாந்த், த/பெ.சம்பத் (வயது 17) மற்றும் செல்வன். பாலாஜி, த/பெ.கிருஷ்ணமூர்த்தி (வயது 16) ஆகிய இரண்டு மாணவர்களும் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற வேதனையான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.

இதேபோல், கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், வி.குமாரமங்கலம் கிராமம் பெரியகாலனியைச் சேர்ந்த செல்வன்.தினேஷ், த/பெ.தெய்வசிகாமணி (வயது 14) மற்றும் செல்வன்.இன்பரசன், த/பெ.சுந்தரபாண்டியன் ஆகிய இருவரும் கடந்த 23ம் தேதி காலை அதே கிராமத்திலுள்ள ஏரியில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியினையும் கேட்டு மிகவும் வேதனையடைந்தேன். உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

3 நாள் பயணமாக மீண்டும் தமிழ்நாடு வருகிறாரா பிரதமர் மோடி?

தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம் அளிக்கும் படிப்புச் சான்று வேலைவாய்ப்புக்கு செல்லாது என்ற அரசாணைக்கு தடை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 16 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்