தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. இந்த ஆண்டில் மொத்த தேர்ச்சி வீதம் 94.56 சதவீதம் ஆகும். இந்நிலையில் விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு இன்று முதல் வருகிற 11-ந்தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. விடைத்தாள் நகல், மறுகூட்டல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுக்கு மட்டுமே தேர்வர்கள் விண்ணப்பிக்க முடியும். அதேபோல், விடைத்தாள் நகல் பெற்றவர்களுக்கு மட்டுமே மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும். பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்.
ஒவ்வொரு பாடத்துக்கு விடைத்தாள் நகல் பெற ரூ.275-ம், மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு ரூ.305-ம், பிற பாடங்களுக்கு ரூ.205-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்கும்போது, வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அதில் உள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்ய முடியும் எனவும், எப்போது பதிவிறக்கம் செய்யலாம் என்பது பற்றி www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பின்னர் தெரிவிக்கப்படும் எனவும் அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.