சென்னை: ரம்ஜான் பெருநாளையொட்டி 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதி தேர்வு தேதிகளில் பள்ளி கல்வித்துறை மாற்றம் செய்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வி துறை அனுப்பிய சுற்றறிக்கை: ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு பள்ளி தேர்வு தேதியை மாற்றி அமைக்க கோரி சட்டமன்ற உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன. அதனடிப்படையில், தேர்வு கால அட்டவணையில் மாற்றம் செய்து அறிவுரைகள் வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் 4 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அடுத்த மாதம் 10ம் தேதி நடைபெறுவதாக குறிப்பிடப்பட்ட அறிவியல் தேர்வு 22ம் தேதியும், 12ம் தேதி நடைபெறுவதாக குறிப்பிடப்பட்ட சமூக அறிவியல் தேர்வு 23ம் தேதியும் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, தேர்வுகளை நடத்திட அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும்.