சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மின்சார கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளது கண்டிக்கத்தக்கது. கொரோனாவின் தாக்கத்தில் இருந்து மீண்டு வணிக நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டு இருக்கும் இந்த நிலையில் தற்போது தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும். ஏழை எளிய நடுத்தர மக்கள் மீது தான் மேலும் சுமை ஏறும். எனவே, உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை அரசு திரும்ப பெற வலியுறுத்தி வரும் 12ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு நாளில் ஆட்சியரை சந்தித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மனு அளிக்க உள்ளோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.