தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே பலத்த சூறாவளி காற்றில் நூற்றுக்கு மேலான ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த வாழை மரங்கள் முறிந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் பகுதியில் நேற்று மாலை பலத்த சூறாவளி காற்றுடன் 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டியது. இதனால் அப்பகுதியில் நூற்றுக்கும் மேலான ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன. கடந்த ஆண்டு இதேபோன்று பாதிப்பை சம்பாதித்த வாழை விவசாயிகள் செய்வதறியாது தவிக்கின்றனர்.
வருவாய் துறையினர் உடனடியாக சேதங்களை பார்வையிட்டு நிவாரணம் வழங்க உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது. லட்சுமிபுரம் பகுதியில் நேற்று மாலை வீசிய சூறாவளி காற்றில் சாலையோரம் இருந்த மரங்களும் சாய்ந்தன. 20-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் முறிந்து விழுந்ததால் தேனி, திண்டுக்கல் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வருவாய் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் சாலையில் விழுந்த மரங்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.