நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் பாஜக அலுவலகம் போல கட்டமைக்கப்பட்டுள்ளது: மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் விமர்சனம்

மதுரை: நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் பாஜக அலுவலகம் போல கட்டமைக்கப்பட்டுள்ளதாக சு.வெங்கடேசன் விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், புதிய நாடாளுமன்றத்தின் எல்லா சுவர்களிலும் சனாதனமும், சமஸ்கிருதமும் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஜனநாயகம், மதசார்பின்மை, தேச விடுதலைப் போராட்டம் ஆகிய எதுவும் பாஜகவின் நினைவில் இல்லை. நுழைவுவாயிலில் கையில் தண்டம் ஏந்தி, விரல் நீட்டி ஆவேசமாகக் காட்சியளிக்கும் சாணக்கியனை நிறுவி உள்ளனர் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

சாணக்கியனுக்கும், ஜனநாயக சிந்தனைக்கும் என்ன சம்பந்தம் என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். அரசமைப்புச் சட்டத்திற்குரிய இடத்தில் அர்த்த சாஸ்திரத்துக்கு என்ன வேலை? என்றும் சாடியுள்ளார். கட்டடத்தின் நடுவில் 250 அடி நீளத்தில் விஷ்ணு புராணத்தில் உள்ள பாற்கடலைக் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. பாடபுத்தகங்களில் இருந்து ஜனநாயகக் கோட்பாடுகளை நீக்குவதும் நாடாளுமன்றத்தைப் புராணக் காட்சிகளாக மாற்றுவதும் நேரடி இந்துத்துவா நடவடிக்கையாகும்.

அரசமைப்புச் சட்ட வரைவிற்கு நந்தலால்போஸ் வரைந்த 22 ஓவியங்களில் இருந்து 16 ஓவியங்கள் மறுஉருவாக்கம் செய்துள்ளதாக சொல்லப்பட்டு அதற்கு நேர் எதிரான கருத்துகளைக் காட்சிப்படுத்தியுள்ளனர். இந்தியா அனைவருக்குமானது என்பதையே சிதைக்கும் கோட்பாடுகளால் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. சாவர்க்கரின் பிறந்தநாளில், மன்னராட்சியின் அடையாளமான செங்கோலைக்கொண்டு, சடங்கு சம்பிரதாயங்களோடு மட்டும் இந்த நாடாளுமன்றம் திறக்கப்படவில்லை, இந்த மொத்தக் கருத்தியலைக் கொண்டுதான் இது உருவாக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தீவிர மழைக்கான ஆரஞ்சு அலர்ட்; பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க நெல்லை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி ஐகோர்ட் கிளை ஆணை

மழையின்போது அசம்பாவிதம் நேரிட்டால் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் : மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்!!