ஓசூர்: ஓசூர் அருகே ஏரியில் ஆனந்த குளியல் போடும் 2 காட்டுயானைகளை காண பொதுமக்கள் திரண்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து ஆண்டு தோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 100க்கும் மேற்பட்ட யானை கூட்டங்கள் தமிழகத்திற்குள் நுழைந்துவரும் அவ்வாறு வரக்கூடிய யானைகள் இடப்பெயற்சிக்காகவும், உணவுக்காகவும் விலை நிலங்களை சேதப்படுத்தி மீண்டும் பிப்ரவரி மாத காலங்களில் கர்நாடக வனப்பகுதிக்கு சென்று விடும்.
ஆனால் ஒரு சில யானைகள் வனப்பகுதிக்குள் தஞ்சம் அடைந்து கொண்டு ஆங்காங்கே உள்ள விவசாயிகளை அச்சுறுத்தியும், விளைநிலங்களை சேதப்படுத்தியும் வரும். இன்று காலை தளி அருகே உள்ள மாந்தோட்டத்தில் 2 காட்டு யானைகள் தஞ்சமடைந்தது. பலாப்பழம், மாம்பழ சீசன் காரணமாக அந்த பகுதிகளிலேயே தஞ்சமடைந்து கொண்டு பழங்களை சாப்பிட்டு கொண்டும் திரிந்து வருகிறது. மேலும் தளி பெரிய ஏரியில் 2 ஆண் காட்டு யானைகள் ஏரியில் ஆனந்தமாக குளியல் போட்டு கொண்டு வருகிறது.
இதனை காண அப்பகுதி மக்கள் திரண்டதால் அங்கு பரபரப்பு காணப்பட்டது. இதற்காக வனத்துறை சார்பில் வனசரகர் சுகுமார் தலைமையில் 15க்கும் மேற்பட்ட வனத்துறையினர் யானைகளை கண்காணித்து வருகின்றனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் யானைகளை விரட்டுவதில் தோய்வு ஏற்பட்டுள்ளது. இன்று மாலையில் யானைகள் இடம் பெயர்ந்து தானாகவே அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்வதை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.