சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: ஆம்னி பேருந்துகள் பயண கட்டணத்தை விண்ணை தொடும் அளவுக்கு உயர்த்தியுள்ளன. மதுரையிலிருந்து சென்னைக்கு அதிகபட்சமாக ரூ.4950ம், நெல்லையிலிருந்து ரூ.4120, கோவையிலிருந்து ரூ.4950ம் கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஆம்னி பேருந்து முன்பதிவுக்கான இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மக்களை கசக்கி பிழியும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதும், அதை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பதும் கண்டிக்கத்தக்கது. ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தமிழக அரசு இனியும் அனுமதிக்கக்கூடாது. மக்கள் நலனைக் கருத்தில் கொண்டும், இதுதொடர்பான சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகளை கருத்தில் கொண்டும் அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்யவும், லட்சக்கணக்கில் தண்டம் விதிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.