கொல்கத்தா: பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி பொம்மையை போல் தேர்தல் ஆணையம் செயல்படுவதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார். மேற்குவங்கம், ஹூக்ளி மாவட்டத்த்தில் உள்ள சின்சுராவில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் ரச்சனா பானர்ஜியை ஆதரித்து பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி,‘‘ தேர்தல் ஆணையம் பொம்மையை போன்று மோடியின் உத்தரவுப்படி செயல்படுகிறது.இரண்டரை மாதங்களுக்கு மேலாக மக்களவை தேர்தல் நடத்துவது என்பது ஆளும் கட்சிக்கு சாதகமாக எடுக்கப்பட்ட முடிவு. இதனால், மக்களுக்கு ஏற்படுகின்ற கடும் சிரமங்களை பற்றி தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு தெரியவில்லை.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் வந்த பிறகு 70 வயதுக்கு மேலானவர்களை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் சேர்ப்பது பற்றி ஆலோசித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தேர்தல் நடைமுறைகள் அறிவிப்பதற்கு முன்னதாக இதை அறிவித்திருக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது அறிவிப்பது தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாகும். 400 இடங்களில் வெற்றி என்ற இலக்கை அடைய பாஜவுக்கு வாய்ப்பில்லை என்ற செய்திகள் வருகின்றன.மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு அளிக்கும்’’ என்றார்.