அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு: 12ம் தேதி தீர்ப்பளிக்கிறது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்!

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது ஜன.12ம் தேதிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற தெரிவித்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆக. 12ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சுமார் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்தையினர் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே இரண்டு முறை தாக்கல் செய்த மனுக்களையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, ஜாமின் கோரிய செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை சென்னை உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்த நிலையில் உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்த நிலையில் கீழமை நீதிமன்ற நாடலாம் எனவும் அந்த மனு மீது தகுதியின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், செந்தில் பாலாஜி ஜாமின் கோரி 3வது முறையாக முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, பதில் மனு தாக்கல் செய்யாமல், அமலாகத்துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர் வர உள்ளதாக கூறி விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனிடையே இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், ஜாமீன் மனு மீது வரும் ஜன.12ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்.

 

Related posts

இசுலாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் வாழ்த்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

பீகாரில் கொசாய்மட் என்ற இடத்தில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து