சென்னை: வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னை, தரமணி, தந்தை பெரியார் நகரில் உள்ள 178வது மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்த 10வது வார மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார். இதில், மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், அசன் மௌலானா எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி 10 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிட்டு கடந்த 9 வாரங்களில் 23,315 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. நேற்று 2000க்கு மேற்பட்ட இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற்றது. டெங்கு, மலேரியா, வயிற்றுப்போக்கில் இருந்து மக்களை பாதுகாக்க இந்த முகாம்கள் பயன்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 2 மாதங்களில் 43,432 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. 21,79,991 பொதுமக்கள் பயன்பெற்றுள்ளனர்.