தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெயிலின் தாக்கம்: மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவுரை..!

சென்னை: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெயில் தாக்கத்தில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள அமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார். இது தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (15.05.2023) 12.30 மணிக்கு வெளியிட்டுள்ள அறிவிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில், தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் இயல்பான வெப்பநிலையில் இருந்து 2° 3° c வெப்பநிலை உயர்ந்து காணப்பட்டதாகவும், உயர்ந்தபட்சமாக வேலூரில் 41.5°C பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை, கரூர், பரமத்தி பகுதிகளில் இயல்பான வெப்பநிலையை விட 2° – 3° C அதிகரித்து 40°C ஆக வெப்பநிலை பதிவாகியுள்ளது என்றும், அடுத்த 48 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகள் இயல்பு வெப்பநிலையில் இருந்து 2° – 3° C கூடுதலாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள கீழ்க்காணும் அறிவுரைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டார்.

கோடைகால கடுமையான வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க செய்ய வேண்டியவை

1. உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க, தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும்.

2. அவசியமான பணிகளுக்கு வீட்டை விட்டு வெளியே செல்லும்போது குடிநீரை கையுடன் எடுத்துச் செல்லுங்கள்.

3. ஓ.ஆர்.எஸ் (ORS), எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் குடிக்கவும்.

4. இந்த பருவகாலத்தில் கிடைக்கும் பழங்கள். காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவை உண்ணுங்கள்.

5. நல்ல காற்றோட்டம் உள்ள மற்றும் வெப்பம் தணிந்த இடங்களில் இருக்கவும்.

6. மெல்லிய, தளர்வான பருத்தி ஆடைகளை அணியவும்.

7. வெளியில் செல்லும் போது காலணிகளை அணிவதுடன் குடையினையும் கொண்டு செல்லவும்.

8. உடல் சோர்வாகவோ, மயக்கமாகவோ உணரும் பொழுது உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவும்.

செய்யக் கூடாதவை

1. வெயில் காலங்களில் வெறுங்காலுடன் வெளியே செல்லாதீர்கள்.

2. சிறிய குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் மதிய வேளையில் (12 மணி முதல் 3 மணி வரை) வெளியே செல்வதை தவிர்க்கவும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மகாதேவ் சூதாட்ட செயலி மோசடி வழக்கில் நடிகர் சாகில் கான் கைது: சிறப்பு புலனாய்வு குழு போலீசார் அதிரடி

தென்சென்னை தொகுதிக்கு நிகராக வடசென்னையை மாற்றுவேன்: அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ உறுதி

2021ல் அடிமைகளை விரட்டியதுபோல எஜமானர்களை விரட்ட வேண்டும்; 29 பைசா ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவேச பேச்சு