சென்னை: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுவது எதுவும் நேரலையில் வருவது இல்லை என்று கூறி அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தவர்கள், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேரவை நடுநிலையாக செயல்படவில்லை என்று குறை கூறினார். முக்கிய பிரச்சனைகளை பேசும் போது நேரலை துண்டிக்கப்படுவதாக குற்றம்சாட்டிய அவர், எதிர்க்கட்சியினர் கேட்கும் கேள்விகள் ஒளிபரப்படுவதில்லை என்றும் தெரிவித்தார். முன்னதாக வன்னியர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து பேரவையில் பாமக உறுப்பினர்கள் பேச முயன்றனர்.
இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால், எதிர்த்து குரல் எழுப்பிய பாமக எம்.எல்.ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவையில் 2023- 24ம் நிதியாண்டிற்கான துறை ரீதியான மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி இன்றைய தினம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த புயல் கணிப்பு துறை சார்பில் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.