என்.எல்.சி. நிலம் எடுப்பால் பாதிக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்ட நல சங்கம் சார்பாக குப்புசாமி என்பவர் என்.எல்.சி.-யில் எத்தனை பேருக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு பணி வழங்கப்பட்டது என கேள்வி எழுப்பினார். அதனடிப்படையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் 08.01.1990 முதல் 12.03.2012 வரை 862 பேருக்கு பணி வழங்கப்பட்டதாக பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அந்த பெயர் பட்டியலில் 834 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களின் பெயர்கள் எனவும் அதன் பின்னர் வரும் பெயர்கள் யாவும் வடமாநிலத்தவரை சேர்ந்ததாக உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. நிலம் கொடுத்ததற்காக குப்புசாமி என்பவர் என்.எல்.சி.-யில் பணி வழங்க வேண்டும் என பலமுறை கேட்டுள்ளார். ஆனால் பணி வழங்கப்படாத காரணத்தினால் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.
குறிப்பாக மாவட்ட நிர்வாகம் பரிந்துரையின் பேரில் தான் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. பின்னர் மாவட்ட நிர்வாகம் அளித்த கடிதத்தின் நகலை அளிக்க வேண்டும் என குப்புசாமி தெரிவித்துள்ளார். இதையடுத்து அவ்வாறான கடிதம் இல்லை என்ற தகவலையும் குப்புசாமி பெற்றுள்ளார். என்.எல்.சி. பொறுத்தவரை பல்வேறு விதமான குற்றசாட்டுகள் வைக்கப்பட்டு வரும் நிலையில் இதுதொடர்பான தகவலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.