பெங்களூர்: கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் சென்றுகொண்டிருந்த ஹெலிகாப்டரில் கழுகு மோதியது. கழுகு மோதியதில் ஹெலிகாப்டர் கண்ணாடி துண்டு துண்டாக உடைந்தது. இதையடுத்து ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் மே 10 ஆம் தேதி நடைபெறுகிறது. 224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 113 இடங்களை வெல்ல வேண்டும்.
இந்த தேர்தலில் பாஜக 224 தொகுதிகளிலும் காங்கிரஸ் 223 தொகுதிகளில் ஜனதா தளம் (எஸ்) 211 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது. பாஜக – காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியிருப்பதால் தேசிய தலைவர்கள் கர்நாடகாவில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்பது, வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பது என்று அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தேர்தல் களம் களை கட்டியுள்ளது. இன்று கர்நாடகாவில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், டி கே சிவக்குமார் தேர்தல் பிரசாரத்துக்காக ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டார்.
அப்போது நடுவானில் சென்றுகொண்டிருந்த போது அவரது ஹெலிகாப்டரில் கழுகு மோதியது. இதில் ஹெலிகாப்டர் கண்ணாடி துண்டு துண்டாக உடைந்தது. இதையடுத்து ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏதும் இல்லை. இதையடுத்து டி.கே சிவக்குமார் கார் மூலம் பிரசார இடத்துக்கு புறப்பட்டு சென்றார்.