அதிமுக, பாஜ மாநில தலைமையிடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வரும் நிலையில், சேலத்தில் முகாமிட்டிருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வந்து சந்தித்து பேசிச் சென்றனர். இந்நிலையில் நேற்று மதியம் 1.30 மணிக்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சேலம் வந்து எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அரை மணி நேரத்திற்கும் மேலாக இந்த சந்திப்பு நீடித்தது.
இதேபோல், சேலத்தை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் நேற்று எடப்பாடியை சந்தித்தனர். அப்போது, இன்று சென்னையில் நடக்கும் மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு வரும்படியும் அதில் முக்கிய முடிவு எடுக்கலாம் என எடப்பாடி பழனிசாமி கூறியதாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நேற்று பிற்பகல் 2.50 மணிக்கு சேலம் நெடுஞ்சாலைநகர் வீட்டில் இருந்து கோவைக்கு காரில் எடப்பாடி பழனிசாமி புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து விமானம் மூலம் சென்னை சென்றார்.