கூட்டத்தில், இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, சமூகப் பாகுபாட்டுக்கு ஆளான மக்களுக்கு ஆதரவாக தந்தை பெரியார் நடத்திய சமூகப் பிரசாரங்கள் மற்றும் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு நாற்பது முறை சிறைவாசம் அனுபவித்தவரும், 1962ல் விடுதலை நாளிதழ் ஆசிரியராக பொறுப்பேற்று, தொடர்ந்து 60 ஆண்டுகளையும் கடந்து மிகச் சிறப்பாக பணி செய்து வருபவரும், உண்மை, பெரியார் பிஞ்சு, தி மார்டன் ரெஷனலிஸ்ட் இதழ்களுக்கு ஆசிரியராகவும், இணைய தளங்கள் வாயிலாகவும் மேற்கண்ட கருத்துகளைப் பரப்பி பன்னாட்டு தமிழர்களையும் ஒருங்கிணைத்து பெரியாரின் பணியைத் தொடர்ந்து வருபவரும், தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றிய தமிழரும், திராவிடர் கழக தலைவருமான கி.வீரமணிக்கு 2023ம் ஆண்டிற்கான தகைசால் தமிழர் விருது வழங்க தேர்வுக் குழுவினரால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. தகைசால் தமிழர் விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கி.வீரமணிக்கு, ரூ.10 லட்சத்திற்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படும்.