சேலம்: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெறும் என்று தொடர்ந்து கூறப்பட்டு வந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அதிமுகவிற்கு அல்வா கொடுத்துவிட்டு, திடீரென பாஜ கூட்டணியில் இணைந்தது. இதனால், அதிமுக, பாமக ஆகிய இரு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் மாறி, மாறி ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்தும் குற்றம்சாட்டியும் வருகின்றனர். இந்தநிலையில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் சேலம் பாமக வேட்பாளர் அண்ணாதுரை கூறுகையில், ‘‘பணத்தை நம்பி தேர்தலில் பலர் நிற்கின்றனர். ஆனால் நான் ஜனத்தை நம்பி போட்டியிடுகிறேன். சேலம் தொகுதி எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊராக இருந்தாலும், கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இடைப்பாடி தொகுதியில் போட்டியிட்டு எடப்பாடிக்கே தண்ணி காட்டியவன் நான். நாடாளுமன்ற தேர்தல் ஒன்றும் பொருட்டல்ல. மக்களின் ஆதரவோடு வெற்றி பெறுவேன்,’’ என்றார்.