இந்த ஆண்டுக்கான (2023ம் ஆண்டு) சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 1,105 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு, கடந்த பிப்ரவரி 1ம் தேதி வெளியானது. இத்தேர்வுக்கு சுமார் 7 லட்சம் பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். தமிழகத்தில் சுமார் 50 ஆயிரம் பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கான முதல்நிலை தேர்வு 79 நகரங்களில் கடந்த மே மாதம் 28ம்தேதி நடந்தது. இந்த நிலையில் முதல் நிலை தேர்வுக்கான ரிசல்ட்டை மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய இணைய தளமான www.upsc.gov.in, www.upsconline.nic.inல் நேற்று காலை வெளியிட்டது.
இதுகுறித்து சங்கர் ஐ.ஏ.எஸ். அகடாமி நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி கூறியதாவது: சிவில் சர்வீஸ் பணிக்கான முதல்நிலை தேர்வில் இந்தியா முழுவதும் 14,624 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 700 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். எங்கள் அகடாமியில் சென்னை, பெங்களூர், திருவனந்தபுரம், டெல்லியில் பயின்ற 936 பேர் மாணவர்கள் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 72க்கும் மேற்பட்ட மாணவர்கள் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளனர். தமிழகத்தில் மட்டும் எங்கள் அகடாமியில் படித்த 372 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு அடுத்தக்கட்டமாக மெயின் தேர்வு செப்டம்பர் மாதம் 15ம் தேதி தொடங்குகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை மெயின் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும். மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்தக்கட்டமாக நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதில் தேர்ச்சி பெறுவோருக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றார். வழக்கமாக ரிசல்ட் வெளியிட ஒரு மாதத்திற்கு மேல் ஆகும். ஆனால், கடந்த ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு ரிசல்ட் 15 நாட்களில் வெளியிடப்பட்டது. இந்தாண்டு சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட் 14 நாட்களில் வெளியிடப்பட்டுள்ளது.