இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:
கல்வி சம்பந்தமான விழிப்புணர்வை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் ஊடகம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. பள்ளி படிப்பை முடித்த பிறகு உயர்கல்விக்கான எந்த ஒரு புரிதலும் இல்லாமல் மாணவர்கள் குழப்பத்தில் இருப்பார்கள். அவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்துமே இதுபோன்ற கல்விக் கண்காட்சியில் கிடைக்கும். மாணவர்களுக்காக ஒவ்வொரு வருடமும் தினகரன் இதுபோன்று முன்னெடுப்புகளை நடத்தி வருவது பாராட்டுதலுக்குரியது.
எல்லா பாடப்பிரிவுகளை பற்றியும் ஒருவர் மட்டுமே கூறுவதை விட ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் ஒருவர் அதைப்பற்றி தனித்தனியாக சொல்வதும், அதனை மாணவர்கள் கேட்டு அறிந்துகொள்வதும் தான் சிறந்த முறை. அதற்காகவே இங்கு பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. தினகரன் நிர்வாகம் அதனை சிறந்த முறையில் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
எங்கள் கல்லூரியை பொறுத்தவரை 2 ஆயிரம் மாணவிகள் படித்து வருகிறார்கள். படிப்போடு விளையாட்டு, கலாச்சார நிகழ்ச்சிகள் என இதர நிகழ்ச்சிகளில் மாணவர்களை தயார்படுத்துவது அனைத்து கல்லூரிகளும் செய்வதுதான். அதோடு சேர்த்து எங்கள் கல்லூரி மாணவிகளுக்கு முதல் ஆண்டில் இருந்தே டிப்ளமோ படிப்புகளை வழங்குகிறோம். எனவே பட்டத்தோடு சேர்த்து டிப்ளமோ சான்றிதழ்களையும் எங்கள் மாணவிகள் கையில் எடுத்து செல்கிறார்கள். இவ்வாறு மோகனஸ்ரீ கூறினார்.