2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அரசு பங்களாவை காலி செய்ய ராகுல் காந்திக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டு இருந்தது. மேலும் ஏப்ரல் 22-ம் தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என்று மக்களவைச் செயலகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி, அரசு பங்களாவை காலி செய்த ராகுல் காந்தி, அதன் சாவியை சாவியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா மற்றும் கே.சி.வேணுகோபால் முன்னிலையில் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
அரசு பங்களாவை ராகுல் காந்தி காலி செய்தது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில், ”இந்த நாடு ராகுல் காந்தியின் வீடு. நாட்டு மக்களின் இதயங்களில் ராகுல் குடியிருக்கிறார். மக்களுடனான அவரது உறவை பிரிக்க முடியாது. அவரை தங்களது மகனாக, சகோதரனாக, தலைவராகப் பார்க்கிறார்கள்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “இந்திய மக்கள் இந்த வீட்டை 19 ஆண்டுகளாக எனக்குக் கொடுத்திருக்கிறார்கள்.. அவர்களுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். ஆனால் அந்த வீடு என்னிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. உண்மையைப் பேசுவதற்கு நான் எந்த விலையையும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்” என்றார்.